உலகம்

டிரம்பின் சொகுசு பங்களாவில் ரகசிய ஆவணங்கள் சிக்கியது- எப்.பி.ஐ. அதிகாரிகள் அறிவிப்பு

Published On 2022-08-13 05:30 GMT   |   Update On 2022-08-13 05:30 GMT
  • கடந்த 8-ந் தேதி எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
  • டிரம்ப்பின் எஸ்டேட்டில் இருந்து ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன்:

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். அவருக்கு சொந்தமாக மார்-ஏ-லகோ என்ற எஸ்டேட் புளோரிடா மாகாணத்தில் உள்ளது.

இந்த எஸ்டேட்டில் கடந்த 8-ந் தேதி எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த அதிபர் தேர்தலில் தோற்ற டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது ரகசிய ஆவணங்களை பெட்டியில் வைத்து எடுத்து சென்றதாகவும், அந்த ஆணங்களை இந்த எஸ்டேட்டில் வைத்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ரகசிய ஆவணங்களை கண்டுபிடிப்பதற்காக டிரம்பின் எஸ்டேட்டில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனைக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். அதே வேளையில் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் டிரம்ப்பின் எஸ்டேட்டில் இருந்து ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனைக்கான வாரண்ட், பறிமுதல் செய்யப்பட்டதை குறித்து விவரங்களை எப்.பி.ஐ. அதிகாரிகள் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

சீலிட்ட அந்த கவரை பிரிக்க நீதித்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து கவரை புளோரிடா நீதிபதி பிரித்தார். அதில், அரசு கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கக்கூடிய ரகசிய ஆவணங்கள் டிரம்பின் எஸ்டேட்டில் கைப்பற்றப் பட்டதாகவும், பிரான்ஸ் அதிபர் குறித்த தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, சோதனையில் அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News