உலகம்

இலங்கையில் தமிழ் எம்.பி. கைதால் பரபரப்பு: பின்னணி என்ன?

Published On 2023-06-09 08:20 IST   |   Update On 2023-06-09 08:20:00 IST
  • மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
  • இலங்கை நாடாளுமன்றத்தில் உரிமை பிரச்சினை ஒன்றை எழுப்ப இருந்தார்.

கொழும்பு

இலங்கையில் தமிழ் தேசிய முன்னணியின் மூத்த தலைவர்களில் ஒருவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவர் யாழ்ப்பாணம் தொகுதி எம்.பி. ஆவார்.

இவர் இலங்கை நாடாளுமன்றத்தில் உரிமை பிரச்சினை ஒன்றை எழுப்ப இருந்தார். அந்த நேரத்தில், கொழும்பு நகரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

போலீசார் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்த குற்றச்சாட்டின்பேரில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின.

அவர் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் நாடாளுமன்றத்துக்கு செல்லவிருந்த நிலையில் அவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டது தமிழர்கள் பெருவாரியாக வாழும் வடக்கு மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கைது பற்றி கூறப்படுவதாவது:-

கடந்த 2-ந்தேதியன்று கஜேந்திர குமார் பொன்னம்பலம் எம்.பி, வடமராச்சி என்ற இடத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார். அந்த இடத்தில் கூட்டம் நடத்துவது குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்கு சி.ஐ.டி. அதிகாரிகள் என்று சிலர் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் வந்து அவரைச் சந்தித்துள்ளனர்.

ஆனால் அவர்களை அடையாள அட்டையை காட்டும்படி அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். மேலும், அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது போலீசார் அவரை தாக்கியும் உள்ளனர். வந்த போலீசாரில் ஒருவர் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டியும் உள்ளார்.

மேலும் அவரை மருதங்கேணி போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் அளிக்குமாறு கூறி உள்ளனர்.

ஆனால் அவர் நாடாளுமன்ற சபாநாயகரைத் தொடர்பு கொண்டு பேசி தனக்கு நடந்ததை கூறினார். அதைத்தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்துக்கு வந்து உரிமை பிரச்சினையை எழுப்பலாம் என்றும் 12-ந்தேதிக்கு பின்னர் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் எனவும் கூறியதாக தெரிகிறது. இதையொட்டி போலீஸ் ஐ.ஜி. அவருக்கு உறுதியும் அளித்துள்ளார். அதையும் மீறித்தான் கைது நடவடிக்கை நடந்துள்ளது.

இவ்வாறு தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News