உலகம்

100 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷியா

Published On 2025-05-25 13:11 IST   |   Update On 2025-05-25 13:11:00 IST
  • நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா மிகப்பெரிய அளவில் டிரோன்-ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
  • தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து ஏவப்பட்ட டிரோன்களும் அழிக்கப்பட்டன.

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் ரஷியா-உக்ரைன் இடையே முதல் முறையாக போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை துருக்கியில் நடந்தது.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் இரு தரப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக நேற்று உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா மிகப்பெரிய அளவில் டிரோன்-ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

இந்த நிலையில் இன்று அதிகாலை ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியது. தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த டிரோன்களை நடுவானில் இடைமறித்து ரஷியா அழித்தது. இது தொடர்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறும் போது, இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 உக்ரைன் டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டது. மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் 4 மணி நேரத்திற்குள் 95 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து ஏவப்பட்ட டிரோன்களும் அழிக்கப்பட்டன. மத்திய நகரமான துலாவிலும், மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ட்வெர் நகரத்திலும் வான் பாதுகாப்பு பிரிவுகள் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது என்று தெரிவித்தது.

மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் கூறும்போது, தலைநகருக்கு அருகில் 11 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்றார்.

Tags:    

Similar News