உலகம்

ராணியிடம் ஆசிபெற்ற லிஸ் டிரஸ்

பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் நியமனம் - ராணி எலிசபெத்திடம் ஆசி பெற்றார்

Published On 2022-09-06 12:33 GMT   |   Update On 2022-09-06 12:33 GMT
  • ஆளும் கட்சி தலைவராக தேர்வான லிஸ் டிரஸ் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இன்று அவர் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து ஆசி பெற்றார்.

லண்டன்:

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர்.

வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார்.

இந்நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை லிஸ் டிரஸ் இன்று சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, ராணி எலிசபெத் லிஸ் டிரசை பிரதமராக அறிவித்தார். தொடர்ந்து அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

Tags:    

Similar News