உலகம்

அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Published On 2024-02-14 13:18 GMT   |   Update On 2024-02-14 13:18 GMT
  • அபுதாபியின் முதல் இந்து கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
  • கோவில் மட்டும் தரைதளத்துடன் சேர்ந்து 2 தளங்களாக 55,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

அபுதாபி:

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அபுதாபிக்குச் சென்ற அவர் நேற்று மாலை 'அஹ்லன்' மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர்.

தொடர்ந்து, அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றினார்.

இதற்கிடையே, துபாயில் 3-வது நாளாக நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கவுரவ விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேசினார். இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்நிலையில், பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

கோவில் மட்டும் தரைதளத்துடன் சேர்ந்து 2 தளங்களாக 55,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களைப் பார்வையிட்டு அங்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்.

Tags:    

Similar News