உலகம்

இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுமி பலி

Published On 2022-12-14 05:06 GMT   |   Update On 2022-12-14 05:06 GMT
  • வீடுகளின் மேற்கூரையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் இஸ்ரேல் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
  • சிறுமியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட் வருத்தம் தெரிவித்ததோடு, அவளது குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.

ஜெருசலேம்:

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் முகாமில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி அவர்களை கைது செய்ய இஸ்ரேல் ராணுவம் அங்கு தேடுல் வேட்டையில் ஈடுபட்டது.

அப்போது அங்குள்ள வீடுகளின் மேற்கூரையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் இஸ்ரேல் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இஸ்ரேல் வீரர்கள் அவர்களை குறிவைத்து பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

அப்போது இஸ்ரேல் வீரர்கள் சுட்டதில் ஒரு வீட்டில் இருந்த 16 வயது பாலஸ்தீன சிறுமியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவள் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தாள். இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுமி உயிரிழந்தது அங்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சிறுமியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட் வருத்தம் தெரிவித்ததோடு, அவளது குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் தொடர்ந்து விசாரணை நடத்தும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

Tags:    

Similar News