உலகம்

நீதிமன்ற வளாகத்தில் வன்முறை.. 8 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன்

Published On 2023-05-23 13:16 GMT   |   Update On 2023-05-23 13:16 GMT
  • கருவூல முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது வன்முறை ஏற்பட்டது.
  • பல்வேறு காவல் நிலையங்களில் இம்ரான் கான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ந்தேதி இஸ்லாமாபாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர் அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்ரான்கான் கைது சட்டவிரோதம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான் கானுக்கு லாகூர் ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி கருவூல முறைகேடு வழக்கு விசாரணைக்கு இஸ்லாமாபாத் உள்ள நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜராக வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ்காரர்களுக்கும், இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 25 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் இம்ரான் கான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வன்முறை தொடர்பான 8 வழக்குகளில் இன்று பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இம்ரான் கானுக்கு ஜூன் 8 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி உள்ளது. 

Tags:    

Similar News