உலகம்

"அஹ்லன் மோடி" நிகழ்ச்சிக்காக ரெடியாகும் இந்திய சமூகம்.. அபுதாபியில் கோலாகலம்

Published On 2024-02-13 10:15 GMT   |   Update On 2024-02-13 11:29 GMT
  • பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • 700 நடன கலைஞர்கள் தயாராகி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி அபுதாபியில் இந்திய சமூகத்தினர் கலந்து கொள்ளும் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

"அஹ்லன் மோடி" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இதில் கலந்து கொள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினர் விருப்பம் தெரிவித்து, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்து இருந்தனர்.

 


எனினும், நேற்றிரவு ஏற்பட்ட வானிலை இடர்பாடுகளால் அஹ்லன் மோடி நிகழ்ச்சியில் 2 ஆயிரத்து 500 பேர் மட்டுமே கலந்து கொள்வர் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக 700 நடன கலைஞர்கள் தயாராகி வருகின்றனர்.

அபுதாபியில் வசிப்பவரும், அஹ்லன் மோடி நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான வேத் பிரகாஷ் குப்தா இது குறித்து பேசும் போது, "இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே உள்ள உறவில் இது மிகப்பெரிய மைல்கல் ஆகும். இதற்காக பல்வேறு துறைகளை சேர்ந்த 1500 பேர் குழுவாக இணைந்து பணியாற்றி வருகிறோம்."

"நேற்று கனமழை பெய்தது, ஆனால் இன்று வானிலை தெளிவாகவே உள்ளது. எல்லோரும் பிரதமர் மோடிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தியர்களுக்கு இது மிகவும் பெருமையான தருணம்..," என்று தெரிவித்தார்.


Tags:    

Similar News