உலகம்

ஹாங்காங்கில் கொலையுண்ட மாடல் அழகியின் தலை பானையில் மீட்பு

Published On 2023-03-01 09:22 GMT   |   Update On 2023-03-01 09:22 GMT
  • அபிசோய்க்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
  • போலீசார் அபிசோயின் கணவர் மற்றும் மாமனார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹாங்காங்:

ஹாங்காங் நாட்டில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் அபிசோய் (வயது 28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற இவர் சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருந்தவர். இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இவரை சுமார் 1 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அபிசோய்க்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் திடீரென மாயமாகி விட்டார். இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். மாமியார் வீட்டில் போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினார்கள். அப்போது குளிர்சாதன பெட்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அபிசோய் பிணமாக இருந்தது தெரியவந்தது. அவரது உடல் பாகங்கள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அதை போலீசார் மீட்டனர். ஆனால் தலை மற்றும் கை கால்களை மட்டும் காணாமல் போனது தெரியவந்தது. போலீசார் அந்த உறுப்புகளை தேடி வந்தனர். இதில் தலை சூப்கள் நிறைந்த பெரிய பானையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் தலையை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். மற்ற உடல் பாகங்களை தேடும் பணி நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அபிசோயின் கணவர் மற்றும் மாமனார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சம்பவம் நடந்த அன்று மாடல் அழகி அபிசோய் காரில் வைத்து தாக்கப்பட்டதால் மயக்கம் அடைந்து உள்ளார். பின்னர் அவரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடல்பாகங்களை மறைத்து வைத்திருந்த விவரம் தெரிய வந்தது. கோடிக்கணக்கான சொத்துக்காக இந்த கொடூர கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த நாட்டை உலுக்கி உள்ளது.

Tags:    

Similar News