ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு
- சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
- ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.
கான்பெரா:
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.
எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது வரும் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க டிக்-டாக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் சுமார் ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் சமூக வலைதள கணக்குகளில் இருந்து தங்களது தரவுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள சிறுவர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.