உலகம்

"வழக்கு வேண்டாமா? பதிலுக்கு...": வசமாய் சிக்கிய காவல் அதிகாரி

Published On 2023-10-18 14:09 GMT   |   Update On 2023-10-18 14:09 GMT
  • சாலை விதிமீறல் அமெரிக்காவில் குற்றமாக கருதப்படுகிறது
  • சிகப்பு விளக்கு எரிவதை கண்டும் சாலையை அப்பெண் கடந்தார்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பினெல்லஸ் கவுன்டி (Pinellas County) பகுதியில் உள்ளது க்ளியர்வாட்டர் (Clearwater) நகரம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இங்குள்ள கடற்கரை பகுதியில் உள்ள ஒரு டிராபிக் சிக்னல் அருகே 32 வயதான ஒரு பெண் சுற்றுலா பயணி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதசாரிகள் சாலையை கடக்க முயல்வதை தடுக்கும் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அப்பெண் அதை பொருட்படுத்தாமல் சாலையை கடக்க முயற்சித்தார்.

சாலை விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை தீவிரமாக வலியுறுத்தும் அமெரிக்காவில் இந்த விதிமீறல் குற்றமாக கருதப்படுவதால், அங்குள்ள டிராபிக் காவல் அதிகாரி நிகோலஸ் பலோமா (29) அப்பெண்ணை தடுத்து நிறுத்தினார்.

அப்பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிகோலஸ், அப்பெண்ணை தனது காரில் ஏற சொன்னார். தயங்கிய அப்பெண்ணிடம், சாலை விதிமீறலுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க தனது பாலியல் ஆசைகளுக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அவரிடம் சிக்கி கொண்ட அப்பெண்ணை தனது காரில் 30 நிமிடங்களுக்கும் மேலாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று தகாத முறையில் நடந்து கொண்டார். பிறகு அப்பெண் தங்கியிருந்த ஓட்டலில் அவரை இறக்கி விட்டு சென்று விட்டார். குற்றம் செய்தவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதால் அப்பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில் அப்பெண்ணுக்கும் அவரது நண்பருக்கும் இடையே நடந்த ஒரு மோதலை தீர்க்க காவல்துறையினர் சென்றிருந்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையில் அப்பெண் தனக்கு நேர்ந்ததை தெரிவித்தார்.

தங்கள் துறையை சேர்ந்த ஒருவரே பெருங்குற்றம் புரிந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் நிகோலஸை வலைவீசி தேடி வந்தனர்.

இறுதியாக நேற்று அவரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News