தீ விபத்து
ஈரான் சிறையில் தீ விபத்து - 4 கைதிகள் உடல் கருகி பலி
- ஈரான் சிறையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- இதில் சிக்கி 4 பேர் பலியாகினர். 60-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
டெஹ்ரான்:
ஈரான் தலைநகர் டெஹ்ரானின் புறநகர் பகுதியான எவின் என்கிற இடத்தில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இந்தச் சிறையில் அரசு எதிர்ப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்படுகின்றனர்.
இந்த சிறையில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறையில் கைதிகள் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது அங்குள்ள துணி கிடங்கில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
கைதிகள் இடையிலான மோதல், அதை தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தால் சிறையில் பெரும் பதற்றம் உருவானது. சிறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.