ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல் செல்லலாம்., ஆனால் ஒரு கண்டிசன் என்கிறது ஈரான்
- ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
- அந்த வழியாக செல்லும் கப்பலை மூழ்கடிப்போம் என ஈரான் சபதம்.
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை செய்யும் முக்கிய நீர் போக்குவரத்து வழியாக ஹார்முஸ் ஜலசந்தி விளங்குகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியதால், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது.
இந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு கடலுக்குள் சமாதிதான் என எச்சரித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால், இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ஈரான் அறிவித்தது.
அதன்படி இன்று இரண்டு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து பாதுகாப்பான கடல் எல்லைக்குள் வந்துள்ளது.
இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல அனுமதிப்போம். ஆனால் சீனாவின் யுவானில் வர்த்தகம் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
ஈரானுக்கு சீனா ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும், சீன பண மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றால் அது சீனாவுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பலமாக அமையும். அமெரிக்காவை வர்த்தக ரீதியாக தைரியமாக எதிர்க்கும் நாடுகளில் ஒன்று சீனா. அதனால் சீனாவை உள்ளே இழுத்து, அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என ஈரான் விரும்புகிறது.
ஈராக், லிபியா மற்றும் வெனிசுலா ஆகியவை டாலரில் எண்ணெய் வர்த்தகம் செய்யமாட்டாம் எனக் கூறியதால்தான் அமெரிக்கா அந்த நாடுகளை ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.