இஸ்ரேல்- லெபனான் இடையே நேரடி பேச்சுவார்த்தையை நடத்த தயார்: பிரான்ஸ் சொல்கிறது
- ஹிஸ்புல்லா உடனடியாக பொறுப்பற்ற பதற்றத்தை நிறுத்த வேண்டும்.
- மிகப்பெரிய அளவிலான தாக்குதல் மற்றும் வான்தாக்குதலை இஸ்ரேல் கைவிட வேண்டும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. இன்று 15-வது நாளாக போர் நீடித்து வருகிறது. ஈரானுக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவாக உள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதனால் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் லெபனான் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேல்- லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட நேரடி பேச்சுவார்த்தையை நடத்த தயார் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேகரான் கூறுகையில் "நான் லெபனான் நாட்டின் அதிபர், பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோரிடம் பேசினேன். அப்போது நாடு குழப்பத்தில் மூழ்காமல் இருப்பதற்கான அனைத்தும் செய்ய வேண்டும் என்று பேசினோம்.
ஹிஸ்புல்லா உடனடியாக பொறுப்பற்ற பதற்றத்தை நிறுத்த வேண்டும். மிகப்பெரிய அளவிலான தாக்குதல் மற்றும் வான்தாக்குதலை இஸ்ரேல் கைவிட வேண்டும். இஸ்ரேல் உடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் ஆர்வமாக இருப்பதாக லெபனான் தலைவர்கள் தெரிவித்தனர்.
போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு இஸ்ரேல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். ஆனால் எந்த எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று லெபனான் அதிபர் ஜோசப் அவோன் தெரிவித்துள்ளார்.