உலகம்

இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் நாளை பேரணி, பொதுக்கூட்டம் நடத்த திட்டம்

Published On 2022-07-01 02:10 GMT   |   Update On 2022-07-01 02:10 GMT
  • பிரதமராக இருந்த இம்ரான்கான் கடந்த ஏப்ரல் மாதம் பதவி இழந்தார்.
  • பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துமாறு கோரி வருகிறார்.

இஸ்லாமாபாத் :

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், பிரதமராக இருந்த இம்ரான்கான் கடந்த ஏப்ரல் மாதம் பதவி இழந்தார். இப்படி பதவி இழந்த முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்தான்.

அவர் பதவி இழந்ததைத்தொடர்ந்து பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துமாறு கோரி வருகிறார். இது தொடர்பாக பேரணி, பொதுக்கூட்டம் என நடத்தி வருகிறார்.

அந்த வகையில், நாளை (2-ந்தேதி) அவர் இஸ்லாமாபாத்தில் அணிவகுப்பு மைதானத்தில் பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில், பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், தங்களது பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு, இஸ்லாமாபாத் போலீஸ் துணை கமிஷனருக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அவர் அனுமதி தராமல் தாமதம் செய்வததாகக் கூறி, அனுமதி தருமாறு உத்தரவிடக் கோரி உள்ளனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News