நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் என தெரியவில்லை - கொலை முயற்சி குறித்து டிரம்ப்
- ஒருவேளை நான் கொஞ்சம் குறைவான செல்வாக்குள்ள தலைவராக இருந்திருக்கலாமோ என்னவோ?
- எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தான்.
அமெரிக்காவின் புளோரிடாவில் அதிபர் டிரம்ப் உடைய இல்லத்திற்குள் கடந்த பிப்ரவரி 22 அதிகாலை 1:30 மணியளவில் இளைஞர் ஒருவன் ஷாட்கன் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனுடன் நுழைய முயன்றான்.
எச்சரிக்கை விடுத்தும், அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால், சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் அவனைச் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தின் போது டிரம்ப் மற்றும் அவரது மனைவி வெள்ளை மாளிகையில் இருந்தனர்.
அந்த இளைஞன் 21 வயதான ஆஸ்டின் டக்கர் மார்ட்டின் என்று அடையாளம் காணப்பட்டான்.
இந்தச் சம்பவம் குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப்,
"நான் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருப்பேன் எனத் தெரியவில்லை. எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?" என்று நகைச்சுவையாக வினவினார்.
மேலும், "ஆபிரகாம் லிங்கன், கென்னடி போன்ற மிகப்பெரிய செல்வாக்குள்ள தலைவர்களையே இதுபோல இலக்கு வைப்பார்கள்.
ஒருவேளை நான் கொஞ்சம் குறைவான செல்வாக்குள்ள தலைவராக இருந்திருக்கலாமோ என்னவோ? கொஞ்ச காலம் ஒரு சாதாரண அதிபராக இருக்க முயற்சிப்போம்" என்றும் அவர் கிண்டலாகப் பேசினார்.
கொல்லப்பட்ட இளைஞன் மார்ட்டின், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருந்தது அவனது குறுஞ்செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.
டிரம்ப் மீது ஏற்கனவே இரண்டு முறை கொலை முயற்சிகள் நடந்துள்ள நிலையில், இந்த மூன்றாவது முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.