உலகம்

சாதனைக்கு பிறகு சோதனை?: ஓபன்ஏஐ நிறுவனத்திடம் அமெரிக்க வர்த்தக ஆணையம் விசாரணை

Published On 2023-07-14 14:36 GMT   |   Update On 2023-07-14 14:36 GMT
  • அதிவேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் செயலி என்று ஆய்வாளர்கள் சாட்ஜிபிடி செயலியை குறிப்பிடுகின்றனர்.
  • அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க பாராளுமன்றமும் புதிய விதிமுறைகளை கோடிட்டுக் காட்ட போராடி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்டு உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயலியை, சென்ற வருட இறுதியில் சந்தையில் அறிமுகப்படுத்தி பெரும் வெற்றியடைந்து பிரபலமாகியுள்ளது ஓபன்ஏஐ (OpenAI) மென்பொருள் நிறுவனம். இதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன்.

இந்த நிறுவனத்தின் மீது அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் (Federal Trade Commission) ஒரு விரிவான விசாரணையை துவங்கியுள்ளது.

மக்களின் தனிப்பட்ட பெயர் மற்றும் தரவுகளை அவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் விதத்தில் ஓபன்ஏஐ பயன்படுத்துவதாக கூறப்படுவதால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை அந்நிறுவனம் மீறுகிறதா என்பதை எஃப்.டி.சி. ஆய்வு செய்கிறது.

மிக அதிக எண்ணிக்கையிலான மக்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து, அவற்றை செயற்கை நுண்ணறிவின் மூலம் தேவைப்படும் விதத்தில் பாகுபடுத்தி சாட்ஜிபிடி உருவாக்கப்பட்டது. மாதிரிகள் (samples) சேகரிப்பினால் எழக்கூடிய அபாயங்களை எப்படி அந்நிறுவனம் சரி செய்கிறது என்பது பற்றிய பதிவுகளை தெரிவிக்கும்படி 20-பக்க கோரிக்கையை எஃப்.டி.சி. அனுப்பியிருக்கிறது.

அதிவேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் செயலி என்று ஆய்வாளர்கள் சாட்ஜிபிடி செயலியை குறிப்பிடுகின்றனர்.

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பெருமளவு அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட இருப்பதால் அது குறித்த கொள்கையை வரையறுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த ஒழுங்குமுறை வரையறைகள் ஓபன்ஏஐ நிறுவனத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஆரம்ப வெற்றியானது சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களிடையே இதை விட சிறப்பான ஒரு செயலியை உருவாக்க ஒரு போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க பாராளுமன்றமும் புதிய விதிமுறைகளை கோடிட்டுக் காட்ட போராடி வருகிறது. செயற்கை நுண்ணறிவுக்கான ஒழுங்குமுறை பற்றிய விவாதங்களில் சாம் ஆல்ட்மேன், ஒரு செல்வாக்கு மிக்க நபராக உருவெடுத்திருக்கிறார். அமெரிக்காவில் எம்.பி.க்கள் மட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருடனும் நெருக்கமானவராக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் நிறுவனம் எஃப்.டி.சியின் மூலம் ஒரு புதிய சோதனையை எதிர்கொள்கிறது.

ஏற்கனவே இருக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று எஃப்.டி.சி. பலமுறை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

ஒரு நிறுவனம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறுவதாக எஃப்.டி.சி. கண்டறிந்தால், அது அந்நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கலாம் அல்லது அந்நிறுவனம் அதன் தரவை எவ்வாறு கையாள வேண்டும் என்று ஆணையிடலாம்.

எஃப்.டி.சி.யின் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபன்ஏஐ, "முழு ஒத்துழைப்பு கொடுப்போம்" என மட்டும் கூறியுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாக கூறி மெட்டா, அமேசான் மற்றும் ட்விட்டருக்கு எதிராக எஃப்.டி.சி. பெரும் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News