உலகம்

ஒரே போராட்டம் தான்.. இம்ரான் கான் மீது பாய்ந்த 14 வழக்குகள்

Published On 2024-12-05 19:14 IST   |   Update On 2024-12-05 19:14:00 IST
  • மொத்த வழக்குள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்தது.
  • இங்கு பெரும்பாலான அரசு அலுவலகங்கள் உள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் காரணமாக இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட மொத்த வழக்குள் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.

நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பாக இம்ரான் கான் மீது புதிதாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று இஸ்லாமாபாத் காவல் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி நவம்பர் 24 ஆம் தேதி போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டம் இஸ்லாமாபாத்தின் டி-சௌக் பகுதியில் நடைபெற திட்டமிடப்பட்டது. இங்கு பெரும்பாலான அரசு அலுவலகங்கள் உள்ளன.

போராட்டத்தின் அங்கமாக பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியின் ஆதரவாளர்கள் நவம்பர் 26 அன்று இரவு டி-சௌக் அருகே வந்தபோது வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்டனர்.

இம்ரான் கானின் சகோதரிகளில் ஒருவரான நொரீன் நியாசி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இம்ரான் கான் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதற்கு பதில் அளித்த தேசிய பாகிஸ்தான் ஊழல் எதிர்ப்பு நிறுவனம் (NAB) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு விவரங்களை சமர்பித்தது.

Tags:    

Similar News