உலகம்

அயல்நாட்டு மாணவர்களின் பெற்றோருக்கு இனி அனுமதி கிடையாது

Published On 2024-01-03 12:11 GMT   |   Update On 2024-01-03 12:11 GMT
  • புது விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது
  • புதிய விதிகளால் 1,40,000 பேர் வருவது குறைய கூடும் என அரசு கணித்துள்ளது

இங்கிலாந்தில் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு பல புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

அதில் முக்கிய அம்சமாக கல்வி கற்க அங்கு செல்லும் மாணவர்கள், இனி பெற்றோர் உட்பட தங்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களுடன் அழைத்து செல்லவோ, நுழைந்த பிறகு அவர்களை அங்கு வரவழைத்து தங்களுடன் தங்க வைத்து கொள்ளவோ அனுமதி கிடையாது. முதுநிலை ஆராய்ச்சி பட்டங்கள் மற்றும் அரசு நிதியுதவியுடன் பெறப்படும் பட்டங்கள் ஆகியவற்றை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் இந்தியர்கள் உட்பட அனைத்து மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக முனைந்துள்ளது.

புதிய விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் எனவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

"மக்களுக்கு இங்கிலாந்து அரசு அளித்த வாக்குறுதியின்படி எல்லைகளை பலப்படுத்துவது, அகதிகள் வருகையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டோம். கல்வி கற்க "விசா" பெற்று கொண்டு வரும் பலர், பிறகு இங்கேயே பணி தேடி, இங்கிலாந்திலேயே தங்கி விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய வழிமுறை மூலம் சுமார் 1,40,000 பேர் இங்கிலாந்து வருவது குறைய கூடும்" என இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "இன்றிலிருந்து இங்கிலாந்தில் கல்வி பயிலும் பெரும்பாலான அயல்நாட்டு மாணவ மாணவியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவது முடியாது. 2024 தொடங்கியதுமே இங்கிலாந்து மக்களுக்கு நாங்கள் பணியாற்ற தொடங்கி விட்டோம்" என பதிவிட்டுள்ளார்.

2019லிருந்து தங்கள் குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்திற்கு அழைத்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை 930 சதவீதம் அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News