null
வெனிசுலா அதிபர் மாளிகை அருகே பறந்த டிரோன்கள்.. தங்களுக்கு தொடர்பில்லை என அமெரிக்கா மறுப்பு
- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.
- மீண்டும் ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட தயங்கமாட்டேன் என்று மிரட்டல் விடுத்தார்.
வெனிசுலா மீது நேற்று முன் தினம் திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது.
வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.
அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவில்லை என்றால் மதுரோவுக்கு நேர்ந்ததை விட மோசமான முடிவு டெல்சிக்கு ஏற்படும் என எச்சரித்த டிரம்ப், மீண்டும் ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட தயங்கமாட்டேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் உள்ள அதிபர் மாளிகை அருகே அடையாளம் தெரியாத டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் நேரடி இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த டிரோன்களை வெனிசுலா பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகரில் நிலைமை சீராக இருப்பதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் வெனிசுலா அரசு விளக்கம் அளித்துள்ளது.
வெனிசுலா அதிபர் மாளிகை அருகே டிரோன்கள் பறந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.