வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: ரோமுக்கு திருப்பி விடப்பட்ட நியூயார்க்-டெல்லி விமானம்
- அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
- இதைத் தொடர்ந்து அந்த விமானம் ரோமுக்கு திருப்பி விடப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து புதுடெல்லி செல்லும் தினசரி விமானத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஏர்லைன்சின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் நேற்று முன்தினம் இரவு 8.14 மணிக்கு நியூயார்க்கில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 285 பயணிகள் பயணம் செய்தனர்.
காஸ்பியன் கடலுக்கு மேலே சென்று ஐரோப்பா நோக்கித் திரும்பியது.. பாதுகாப்பு அச்சுறுத்தலால் விமானிகள் நடுவானில் யு-டர்ன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, இத்தாலியின் ரோம் நகருக்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டது.
இதுதொடர்பாக, அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ஏஏ 292 விமானத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக ரோமுக்கு திருப்பி விடப்பட்டது. உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். நிலைமை சரியானதும் அடுத்த தகவல் வழங்குவோம். பயணிகளின் பொறுமை மற்றும் ஒத்துழைப்பை பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளது.