உலகம்

80 இந்திய விமானங்கள் தாக்கின.. 3 ரஃபேல் உட்பட 5 விமானங்கள் அழிப்பு - பாகிஸ்தான் பிரதமர் உரை

Published On 2025-05-07 18:10 IST   |   Update On 2025-05-07 18:11:00 IST
  • பாகிஸ்தான் மீது இரவு நேரத்தில் இருளைப் பயன்படுத்தி கோழைத்தனமான தாக்குதலை இந்தியா நடத்தியது.
  • வழக்கமான போராக இருந்தாலும் சரி, அணு ஆயுதப் போராக இருந்தாலும் சரி, நாம் யார் என்பதை இப்போது அவர்கள் அறிவார்கள்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஜெய்ஸ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இன்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார்.

தனது உரையில், பாகிஸ்தான் மீது இரவு நேரத்தில் இருளைப் பயன்படுத்தி கோழைத்தனமான தாக்குதலை இந்தியா நடத்தியது. ஆனால் ராணுவம் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது என்று தெரிவித்தார்.

மொத்தம் 80 இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த அவர் அவற்றில் மூன்று ரஃபேல் விமானங்கள் உட்பட ஐந்து ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்துவதில் ராணுவம் வெற்றி பெற்றது என்று தெரிவித்தார்.

மேலும் இரண்டு ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றார். தொடர்து பேசிய அவர், வழக்கமான போராக இருந்தாலும் சரி, அணு ஆயுதப் போராக இருந்தாலும் சரி, நாம் யார் என்பதை இப்போது அவர்கள் அறிவார்கள்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News