உலகம்

அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

Published On 2025-07-17 10:11 IST   |   Update On 2025-07-17 10:11:00 IST
  • மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
  • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாண மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிற்கு தெற்கே சுமார் 87 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது.

20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீப கற்பத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. சாண்ட் பாயிண்ட் கடற்கரை பகுதிகளில் அதிகபட்சமாக 6.1 செ.மீ. அளவுக்கு சுனாமி அலைகள் எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் 2 மணி நேரங்களுக்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

ஆனாலும் அலாஸ்கா கடற்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்கா மாகாணம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய 'ரிங்க் ஆப் பயர்' என்ற இடத்தில் அமைந்துள்ளது.

Tags:    

Similar News