உலகம்
பாகிஸ்தான் பாராளுமன்ற புதிய சபாநாயகராக பர்வேஸ் அஷ்ரப் நியமனம்
பாகிஸ்தான் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய பாரம்பரியம் தொடங்கப்பட்டிருப்பதாக புதிய சபாநாயகர் அஷ்ரப் கூறினார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகராக, பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் பர்வேஸ் அஷ்ரப் (வயது 71) நியமிக்கப்பட்டுள்ளார். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட, அவருக்கு தற்காலிக சபாநாயகர் அயாஸ் சாதிக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்ற பின் பேசிய அஷ்ரப், தன்னைத் தேர்ந்தெடுத்த தனது கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். பாராளுமன்ற வரலாற்றில் ஒரு புதிய பாரம்பரியம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகருக்கு பிரதமர் ஷெரீப் வாழ்த்து தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் நடந்த மோசமான விஷயங்களை அஷ்ரப் புதைத்துவிடுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
அஷ்ரப் கடந்த 20212ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி முதல் 2013 மார்ச் 16ம் தேதி வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.