உலகம்
இலங்கை டீசல் விற்பனை நிலையம்

இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க பொது மக்களுக்கு கட்டுப்பாடு

Published On 2022-04-16 00:28 GMT   |   Update On 2022-04-16 00:28 GMT
இரு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சம் 1000 ரூபாய் வரை மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கொழும்பு:

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை வாங்க பணம் இல்லாமல் 
பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல்,டீசல் வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் காணப்படுகிறது.

இதனால் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலகக்கோரி தலைநகர் கொழும்புவில் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முதல் இலங்கையில் பல்வேறு வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை அந்நாட்டு பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனம் அறிவித்துள்ளது.  

அதன்படி, இருசக்கர வாகனங்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் அதிகபட்சம் 1000 ரூபாய் வரை மட்டுமே பெட்ரோலை பெற முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதேபோல் ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.1,500 வரையிலும்,  கார், ஜீப், வேன் போன்ற வாகனங்கள் ரூ.5 ஆயிரம் வரை பெட்ரோல், டீசலை வாங்கிக் கொள்ளலாம்.

எனினும் பேருந்து மற்றும் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதால், தேவையான அளவு மட்டுமே எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுளளது.

இலங்கை எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கடன் உதவி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News