உலகம்
சேதமடைந்த கட்டிடம் (PTI Photon)

உக்ரைனின் மைகோலைவ் நகரில் அரசு கட்டிடம் மீது ஏவுகணை தாக்குதல்: 12 பேர் பலி

Published On 2022-03-30 06:02 GMT   |   Update On 2022-03-30 06:02 GMT
மைகோலைவ் நகரில் உள்ள அரசு கட்டிடம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாதத்துக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. ரஷியாவின் ஏவுகணை, வான்வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் உக்ரைனின் தெற்கு நகரமான மைகோலைவ்லில் உள்ள பிராந்திய அரசு கட்டிடத்தை குறிவைத்து ரஷிய படைககள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. 9 மாடி கொண்ட அந்த கட்டிடம் ஏவுகணை தாக்குதலில் இடிந்து விழுந்தது. அதில் 12 பேர் பலியானார்கள். 33 பேர் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மக்களை மீட்பு குழுவினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து உக்ரைனின் அவசர மையம் கூறும்போது, அரசு கட்டிடம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பலியானவர்களில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மைய பகுதி முற்றிலும் சேதமடைந்தது என்று தெரிவித்தது.

இதேபோல் உக்ரைனின் மற்ற நகரங்களிலும் தாக்குதல் நடந்து வருகிறது. கார்கிவ், மரியுபோல் உள்பட நகரங்கள் ரஷிய படைகள் தங்களது தாக்குதலை தொடர்ந்தபடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ரஷியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே அந்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரஷிய படைகள் உக்ரைனில் போரில் ஈடுபட்டு வரும் சூழலில் ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்களை ரஷிய அதிகாரிகள் துண்புறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இதனால் ரஷியாவுக்கு அமெரிக்கா குடிமக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

ரஷியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் தடுத்து நிறுத்தப்படலாம். எனவே அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு உடனடியாக வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே உலகளவில் உணவு நெருக்கடியை ரஷியா ஏற்படுத்தியதாக ஐ.நா. சபையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஷெர்மா கூறும்போது, உக்ரைன் மீதான போரை ரஷிய அதிபர் புதிதான் தொடங்கினார். இந்த உலகளாவிய உணவு நெருக்கடியை உருவாக்கினார். அதை அவர்தான் சரி செய்ய வேண்டும் என்றார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆஸ்திரேலிய நாட்டு பாராளுமன்றத்தில் நாளை காணொலி மூலம் பேசுகிறார். அந்நாடு பாதுகாப்பு உபகரணங்களையும் மனிதாபிமான அடிப்படையில் பொருட்களை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News