உலகம்
இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே

ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவி பெற இந்தியா வருகிறார் இலங்கை நிதி அமைச்சர்

Published On 2022-03-15 13:36 GMT   |   Update On 2022-03-15 13:36 GMT
இலங்கை கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இலங்கை சந்தித்து வரும் பொருளாதாரச் சரிவுக்கு மத்தியில், இந்தியாவிடம் கடன் உதவிப் பெற கையெழுத்திடுவதற்காக அந்நாட்டின் நிதி அமைச்சர் பாசில் ராஜபக்சே இன்று புதுடெல்லிக்கு புறப்பட்டார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் பாசில் ராஜபக்சே மத்திய அரசுடன் முக்கியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுப்படவுள்ளார்.

மேலும் இந்த பயணத்தின்போது நாட்டின் எரிபொருள், உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கு நிதியளிக்க எதிர்பார்க்கப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனைப் பற்றி ராஜபக்சே கலந்துரையாடுவார் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் இந்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பாசில் ராஜபக்சே பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்தியாவின் திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து விவாதித்தார்.

இலங்கை கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவி பெறப்போவதாக இலங்கை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்தியா ஏற்கனவே இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டி வரும் நிலையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம்  ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவிப் பெறுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட இலங்கை நிதியமைச்சர் பாசில் ராஜபக்சே இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்..  இந்திய அளவிலான என்.ஆர்.சி. கணக்கெடுப்பு: மத்திய மந்திரி பதில்
Tags:    

Similar News