உலகம்
ரஷிய படையை எதிர்க்க துப்பாக்கியுடன் களமிறங்கிய மிஸ் உக்ரைன் அழகி- இது உண்மை செய்தி அல்ல
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இது தொடர்பாக அனஸ்தீசியா லென்னா தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி உண்மை இல்லை எனத் தெரியவந்துள்ளது.
கீவ்:
உக்ரைன் மீது ரஷிய போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டின் முன்னாள் அழகி அனஸ்தீசியா லென்னா, அவரது இன்ஸ்டாகிராமில் துப்பாக்கியுடன் நிற்கும் படத்தை வெளியிட்டு, படையெடுக்கும் நோக்குடன் உக்ரைன் எல்லையை கடக்கும் ஒவ்வொருவரும் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், உக்ரைனுடன் துணை நில்லுங்கள், உக்ரைனுடன் கைசேருங்கள் என இரு ஹேஷ்டேகையும் பதிவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
ஆராய்ந்து பார்த்ததில் இந்த செய்தி உண்மை அல்ல தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் ‘‘நான் ராணுவத்தில் இல்லை. நான் சாதாரண பெண். நான் வழக்கமான மனிதர். எனது நாட்டில் உள்ள மற்ற குடிமகன் போன்று நானும் ஒரு சாதாரண குடிமகன். நான் பல வருடங்களாக ஏர்சாஃப்ட் வீரர். ஏர்சாஃப்ட் என்றால் என்ன என்பதை நீங்கள் கூகுளில் பார்க்க முடியும்.
எனது பக்கத்தில் உள்ள அனைத்து படங்களும் மக்களை உத்வேகப்படுத்துவதற்கானது. மில்லியன் கணக்கான மக்களைப் போலவே நானும் புதன்கிழமை சாதாரண வாழ்க்கை வாழ்ந்தேன். உக்ரைனின் பெண் வலிமையான, நம்பிக்கையான மற்றும் சக்தி வாய்ந்தவள் என்பதைக் காட்டுவதைத் தவிர நான் எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.