உலகம்
லாகூர் அனார்கலி சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு - 3 பேர் உயிரிழப்பு
குண்டுவெடிப்பால் அருகில் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன, சில மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன.
லாகூர்:
பாகிஸ்தானின் வணிக நகரமான லாகூரில் உள்ள பிரபல அனார்கலி சந்தையில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்தியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் பான் மண்டி அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பால் நிலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. குண்டுவெடிப்பால் அருகில் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்தன. சில மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன. இந்த, வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
குண்டு வெடித்ததையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சந்தை மூடப்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது.