செய்திகள்
காட்டுத்தீ கொழுந்து விட்டு எரியும் காட்சி

கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீயில் சிக்கி மேலும் 3 பேர் பலி

Published On 2020-09-10 17:42 GMT   |   Update On 2020-09-10 17:42 GMT
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மேலும் 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இதனிடையே கொரோனாவால் முடங்கியுள்ள கலிபோர்னியா மாகாணத்தை காட்டுத்தீயும் திணறடித்து வருகிறது.

கலிபோர்னியாவில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் மரங்கள் வெயிலின் காரணமாக காய்ந்து சருகாகி விடும். அந்த சமயங்களில் மின்னல் போன்ற இயற்கை காரணிகளாலும், மனிதர்களின் தவறுகளாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது.

அத்துடன் வேகமாக வீசும் காற்றும் தீ பரவுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களாக கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுத்தீயை கலிபோர்னியா கண்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான காட்டுத்தீ அணைக்கப்பட்டு விட்டாலும் ஒரு சில இடங்களில் காட்டுத் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பரவி வருகிறது.

இதனிடையே கலிபோர்னியா மாகாணத்தின் சியாரா மலைப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ, இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் காட்டுத்தீயாக பதிவாகியுள்ளது.

கடந்த 7 நாட்களில் இந்த காட்டுத்தீ 78 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பை சாம்பலாக்கியது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மரங்கள் தீயில் கருகியுள்ளன.

இந்நிலையில் கலிபோர்னியாவின் பட் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக மூன்று பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகரித்து வரும் காட்டுத்தீயால் நகரை விட்டு வெளியேற பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பட்கவுண்டி பகுதியில் இதுவரை 85 பேர் காணாமல் போய் உள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிக காற்று வீசுவதால், இதுவரை 25 கி.மீ தூரம் வரையில் காட்டுத்தீ பரவல் அதிகரித்துள்ளது. கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் கூறுகையில், காட்டுத்தீயைத் தடுக்க 560க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News