செய்திகள்
கொரோனா அச்சுறுத்தல்: களை இழந்த ஈஸ்டர் பண்டிகை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் களை இழந்தது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா என்ற ஈஸ்டர் பண்டிகையும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் கோரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. மேலும், வைரஸ் பரவாமல் இருக்க மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களில் நடக்கும் திருவிழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் நேற்று கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதனால், கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு செல்லாமல் தங்கள் வீடுகளிலேயேயும், ஆலயங்களுக்கு வெளியே நின்றும் பிரார்த்தனை செய்து விட்டு சென்றனர். இதனால் வழக்கமான ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை இழந்து காணப்பட்டன.
ஆனாலும், சில தேவாலயங்களில் நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனை நிகழ்ச்சிகளை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர்.