செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கத்துக்குட்டித்தனமாக அமர்ந்திருந்த இம்ரான் கான்

Published On 2019-06-14 12:24 GMT   |   Update On 2019-06-14 12:24 GMT
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அனைவரும் நின்றிருந்த போது அவையடக்கமின்றி அமர்ந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு உள்நாட்டில் கண்டனம் பெருகிவருகிறது.
பிஷ்கெக்:

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இருநாள் மாநாடு இன்று தொடங்கியது. 

இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத தீமைகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டினார். 

முன்னதாக, இன்றைய மாநாட்டுக்காக ஷாங்காய் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இன்று காலை ஒவ்வொருவராக அரங்கத்துக்குள் நுழைந்தனர். 

அவையை நடத்தும் தலைவர் அமரும்வரை அனைத்து உலகநாடுகளின் தலைவர்களும் எழுந்து நின்றிருந்த போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மட்டும் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். 

அவையின் தலைவர் தனது பெயரை அழைக்கும்போது மட்டும் எழுந்து நின்ற இம்ரான் கான், மீண்டும் அமர்ந்து கொண்டார். 

அவரது இந்த கத்துக்குட்டித்தனத்தை அகந்தை , நாகரீகமற்ற செயல் என்பதா? இல்லை அவரது முட்டாள்தனம் என்பதா ? என சமூக வலைதளமான டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அடுத்தமுறை இதுபோன்ற பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்வதற்குமுன் இதுபோன்ற கண்ணியமான அவை நன்நடத்தைகளை கற்றுகொள்ளுங்கள் என இன்னொருவர் பதிவிட்டுள்ளார். 

அவைக்குள் இம்ரான் கான் நுழைந்தார், அமர்ந்தார், பின்னர் எழுந்து நின்றார், மீண்டும் அமர்ந்து விட்டார். இம்ரான் கானுக்கு நாகரீகம் இல்லை என அவரது எதிர்ப்பாளர்கள் கூறக்கூடும். ஆனால், இம்ரான் கான் மிகவும் மரியாதை தெரிந்தவர் என  நான் சொல்லுவேன் என்று இன்னொருவர் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

இம்ரான் கானின் இந்த செயல் காணொளியாக இணையதளங்களில் பரவி கண்டனத்துள்ளாகி வருகிறது.  
Tags:    

Similar News