செய்திகள்

சாலையில் புதைத்தபோது வெடித்து சிதறிய கண்ணிவெடி- 4 தலிபான்கள் உயிரிழப்பு

Published On 2019-04-27 10:18 GMT   |   Update On 2019-04-27 10:18 GMT
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்காக சாலையில் கண்ணிவெடியை புதைத்தபோது அது வெடித்து சிதறியதில், 4 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
பைசாபாத்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப் படைகளுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள், தற்கொலைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பதக்சன் மாகாணம், வார்தோஜ் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். 

வாகனங்களை தகர்ப்பதற்காக தலிபான் பயங்கரவாதிகள், திர்கரன் பகுதியில் உள்ள சாலையில் கண்ணிவெடியை புதைத்துக்கொண்டிருந்தபோது, திடீரென அது வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #AfghanistanTaliban
Tags:    

Similar News