செய்திகள்

இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை

Published On 2019-04-22 07:26 GMT   |   Update On 2019-04-22 09:41 GMT
இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வேதனை தெரிவித்துள்ளார். #SriLankablast #RanilWickremesinghe
கொழும்பு:

இலங்கையைச் சேர்ந்த ஒரு அமைப்பு தற்கொலை தாக்குதல் நடந்த மிகப்பெரிய அளவில் தயாராகி வருவதாக கடந்த 4-ந் தேதியே இந்திய உளவுத்துறை கண்டுபிடித்து இலங்கையை எச்சரித்தது.

இந்திய உளவுத்துறை வழங்கிய எச்சரிக்கை தகவலில், “கொழும்பில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்ற குறிப்புகள் இடம் பெற்றிருந்தன.

இந்தியாவின் இந்த எச்சரிக்கையை இலங்கை அரசியல் தலைவர்களும், ராணுவ தளபதிகளும் சற்று அலட்சியமாக கருதினார்கள். என்றாலும் இலங்கை போலீஸ் தலைவர், பூஜீத் ஜெயசுந்தரா அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் 10 நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில் அவர், “கொழும்பில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரக அலுவலகத்தில் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கவும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் உள்ளூர் போலீசார் அதன் பிறகும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை.



போலீசாரின் அலட்சியத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பயங்கரவாதிகள் திட்டமிட்டப்படி தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டனர். 

இந்த நிலையில் “கவனக்குறைவாக இருந்து விட்டோம்” என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

கொழும்பில் பயங்கரவாதிகள் கைவரிசை காட்ட இருப்பதாக இந்தியா கூறிய பிறகும் நாங்கள் சற்று கவனக்குறைவாக இருந்து விட்டோம். உண்மையில் நாங்கள் போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டோம்.

சர்வதேச உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல் இருந்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்து இருக்கலாம்”

இவ்வாறு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை இந்தியா உதவியுடன் போரில் தோற்கடித்த இலங்கை அதன்பிறகு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது. குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் அதிக கெடுபிடிகள் செய்யப்பட்டன.

கடந்த 2 ஆண்டுகளாக இலங்கையில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு குறைக்கப்பட்டன. இந்த பாதுகாப்பு குறைபாடு இலங்கைக்கு நேற்று மிகப் பெரிய இழப்பை கொடுத்து விட்டது. #SriLankablast #RanilWickremesinghe
 
Tags:    

Similar News