செய்திகள்

பண மோசடி வழக்கில் தேடப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது

Published On 2019-03-20 09:53 GMT   |   Update On 2019-03-20 09:53 GMT
இந்தியாவில் பண மோசடியில் ஈடுபட்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். #NiravModiExtradition #LondonCourt
லண்டன்:

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தப்பி ஓடிய நிரவ் மோடி பிரிட்டனில் இருப்பது தெரியவந்தது. அவரை நாடு கடத்தி கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் சமீபத்தில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.



இதையடுத்து நிரவ் மோடியை லண்டன் போலீசார் இன்று கைது செய்தனர். அவரை இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும்.  #NiravModiExtradition #LondonCourt
Tags:    

Similar News