செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இந்திய தூதரகத்துக்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு

Published On 2019-01-09 18:41 GMT   |   Update On 2019-01-09 18:41 GMT
ஆஸ்திரேலியாவில் இந்திய தூதரகத்துக்கு வந்த மர்ம பார்சலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. #Australia #IndianConsulate
மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தின் தலைநகர் மெல்போர்னில் இந்தியா உள்பட பல்வேறு சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன.

இந்த நிலையில் நேற்று அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு மர்ம பார்சல் ஒன்று வந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் பாகிஸ்தான், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, கிரீஸ், இந்தோனேசியா, இங்கிலாந்து மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் தூதரகங்களுக்கும் மர்ம பார்சல்கள் வந்தன.

இதன் காரணமாக மெல்போர்ன் நகரம் முழுவதும் பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து அனைத்து தூதரகங்களிலும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர சேவைகள் குழுவினர் குவிந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூதரகங்களில் இருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் அந்த மர்ம பார்சல்களை கைப்பற்றி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவற்றில் ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையிலான பொருட்கள் ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் மெல்போர்ன் நகரில் இயல்பு நிலை திரும்பியது.

சர்வதேச நாடுகளின் தூதரகங்களுக்கு மர்ம பார்சல் வந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.   #Australia #IndianConsulate
Tags:    

Similar News