செய்திகள்

இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை: உயர் நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு- ராஜபக்சே

Published On 2018-12-03 16:44 GMT   |   Update On 2018-12-03 16:44 GMT
இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து இலங்கை உயர் நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யப்படும் என ராஜபக்சே கூறினார். #Rajapaksa #sirisena #ranilwickramasinghe
கொழும்பு:

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேயுக்கும் இடையேயான பனிப்போரில் கடந்த அக்டோபர் மாதம் 26ந்தேதி அதிரடி திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து ரனிலை நீக்கியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமர் பதவியில் அமர்த்தியும் சிறிசேனா உத்தரவிட்டார்.  நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல தரப்பிலும் குரல் வலுத்தது. அதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை 14ந்தேதி கூட்டி சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டார். இருப்பினும் ராஜபக்சே குதிரைப்பேரம் நடத்தியும், பெரும்பான்மையை நிரூபிக்கத்தக்க அளவுக்கு தேவையான எம்.பி.க்கள் கிடைக்கவில்லை.

இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா கடந்த 9ந்தேதி உத்தரவிட்டார். நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை அறியாமல் பொதுத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ரனில் விக்ரமசிங்கே உள்ளிட்ட அந்நாட்டு எம்.பி.க்கள் 122 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ராஜபக்சே பிரதமராக செயல்படவும், அமைச்சரவை கூட்டம் நடத்தவும் இடைக்கால தடை விதித்தது. ராஜபக்சேவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும், டிசம்பர் 12ம் தேதி ஆஜராகவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்ததை ஏற்கமாட்டோம். இதனை எதிர்த்து இலங்கை உயர்நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யப்படும் என ராஜபக்சே கூறினார். #Rajapaksa #sirisena #ranilwickramasinghe
Tags:    

Similar News