செய்திகள்

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு

Published On 2018-10-19 12:00 GMT   |   Update On 2018-10-19 12:00 GMT
தலிபான்களின் தாக்குதல் எதிரொலியாக நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் கந்தஹார் மாகாணத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Afghanistanelections #Kandaharelectiondelay #Talibanattack
காபுல்:

249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு நாளை (20-ம் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அறிவுத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், நாட்டின் பல பகுதிகளில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த சில நாட்களில்இவர்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் பத்துக்கும் அதிகமான வேட்பாளர்களும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், தலிபான்களின் கோட்டை என்று கருதப்படும் கந்தஹார் மாகாணத்தில் உள்ள  கவர்னர் அலுவலகத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கந்தஹார் மாகாணத்தின் காவல்துறை தலைவர் ஜெனரல் அப்துல் ரசிக், உளவுத்துறை தலைவர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர். கவர்னர் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

வாக்குப்பதிவு தினமான நாளையும் (20-ம் தேதி) தலிபான்கள் இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களில் ஈடுபடலாம் என அங்குள்ள பொதுமக்களிடையே பீதி நிலவி வருகிறது.

இதனைதொடர்ந்து, கந்தஹார் மாகாணத்தில் மட்டும் பாராளுமன்ற தேர்தல் ஒருவாரத்துக்கு பின்னர் நடத்தப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தி தொடர்பாளர் இன்று அறிவித்துள்ளார். அங்கு வாக்குப்பதிவுக்கான தேதியை தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Afghanistanelections #Kandaharelectiondelay #Talibanattack
Tags:    

Similar News