செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளத்தை கைப்பற்ற தலிபான்கள் தாக்குதல் - 17 வீரர்கள் பலி

Published On 2018-10-14 13:05 GMT   |   Update On 2018-10-14 13:05 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பரா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்ற தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். #Talibanattack #Afghanarmybase
காபுல்:

இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு உள்பட்ட ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகள் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளை வேட்டையாட ஆப்கானிஸ்தான் படைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மேலும், பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் மறைவிடங்கள் மீது உள்நாட்டு ராணுவம் மற்றும் சில வெளிநாட்டு விமானப்படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த இருதரப்பு மோதலில் இந்த ஆண்டில் மட்டும் அப்பாவி பொதுமக்கள் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போர் நிலவரங்களை கண்காணித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் முகமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு பரா மாகாணம், புஷ்ட் ராட் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்றும் நோக்கத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நேற்று பின்னிரவு ஆவேச தாக்குதல் நடத்தினர்.

வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் அவர்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 17 வீரர்கள் உயிரிழந்ததாகவும், அங்கிருந்த ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பயங்கரவாதிகள் அள்ளிச் சென்றதாகவும், 11 வீரர்களை சிறைபிடித்துச் சென்றதாகவும் உள்நாடு ஊடகங்லள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Talibanattack #Afghanarmybase
Tags:    

Similar News