செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் போர் பயிற்சி - கைப்பந்து போட்டியில் பாக். ராணுவத்தை வீழ்த்திய இந்திய ராணுவம்

Published On 2018-08-27 18:56 GMT   |   Update On 2018-08-27 22:53 GMT
ரஷியாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற கைப்பந்து போட்டியில் பாக். ராணுவத்தை வீழ்த்தி இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.
புதுடெல்லி :

பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்து போராடுவதை முக்கிய நோக்கமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சமீபத்தில் சீனாவில் நடைபெற்றது.  

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில், இந்த அமைப்பில் உறுபினர்களாக உள்ள நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சி ரஷியாவில் கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மெகா பயங்கரவாத ஒழிப்பு பயிற்சியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ரஷியா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களாக இணைந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ வீரர்கள் இந்த பயங்கரவாத ஒழிப்பு போர் பயிற்சியில் பங்கேற்றனர்.

இந்த போர் பயிற்சியின் ஒரு பகுதியாக உறுப்பு நாடுகளின் ராணுவ வீரர்கள் பங்கேற்கும் கைப்பந்து போட்டி, கை மல்யுத்தம், நீச்சல் போட்டி உள்பட பல விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ வீரர்கள் பங்கேற்ற கைப்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 3 - 0 எனும் கணக்கில் பாகிஸ்தான் ராணுவத்தை வீழ்த்தி இந்திய ராணுவம் வெற்றி பெற்றது.

விருவிருப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய ராணுவத்துக்கு ஆதராவாக ரஷிய ராணுவ வீரர்களும், பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக சீன ராணுவ விரர்களும் விளையாட்டில் ஆதரவளித்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த பாதுகாப்புப்படை வீரர்கள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News