செய்திகள்

ஈரானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - வீடுகள் இடிந்ததில் ஒருவர் பலி - 58 பேர் காயம்

Published On 2018-08-26 05:55 GMT   |   Update On 2018-08-26 05:55 GMT
ஈரான் நாட்டின் கெர்மானஷனா நகரில் இன்று 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பரிதாபமாக பலியானார். 58 பேர் காயம் அடைந்தனர். #IranEarthquake
தெக்ரான்:

ஈரானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் அங்குள்ள கெர்மன்‌ஷனா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் அதிர்ந்து குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

கெர்மான்ஷா மற்றும் தசேகாபாத் உள்ளிட்ட இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். 58 பேர் காயம் அடைந்தனர்.

5.9 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கெர்மான் ஷாவில் இருந்து வடகிழக்கில் 88 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

முன்னதாக 2 தடவை நில அதிர்வு உணரப்பட்டது. அவை 3 ரிக்டர் ஆக பதிவாகி இருந்தது. தற்போது இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் அண்டை நாடான ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் உணரப்பட்டது. ஆனால் அங்கு யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெர்மான்ஷா மாகாணம் ஈராக் எல்லையில் மலைகள் சூழ்ந்த பகுதி. கடந்த ஆண்டு நவம்பரில் இங்கு 7.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது கெர்மான்ஷா நகரமும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 530 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். #IranEarthquake
Tags:    

Similar News