செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் அதிபரை கைது செய்யும் உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட் ஜாமின்

Published On 2018-08-19 05:04 GMT   |   Update On 2018-08-19 05:04 GMT
போலி வங்கி கணக்குகள் தொடங்கிய ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை கைது செய்யும் உத்தரவுக்கு எதிராக இஸ்லாமாபாத் ஐகோர்ட் பாதுகாப்பு ஜாமின் அளித்துள்ளது. #Zardariarrestwarrant
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி ஃபர்யால் தல்புர், பாகிஸ்தான் பங்குச்சந்தை முன்னாள் தலைவர் ஹுசைன் லவாய் உள்பட மொத்தம் 19 பேர் வங்கிகளில் பினாமி பெயரில் 29 கணக்குகளை தொடங்கி, அவற்றின் மூலமாக சுமார் 3500 கோடி ரூபாய் பணத்தை கள்ளத்தனமாக இடம்மாற்றியதாக கடந்த 2015-ம் ஆண்டு அந்நாட்டின் மத்திய புலனாய்வுதுறை கண்டுபிடித்தது.

இதன் அடிப்படையில், இவர்கள் மீது வங்கியியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருவதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிபர் ஆசிப் அலி சர்தாரியை கைது செய்து வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி ஆஜர்படுத்துமாறு கோர்ட் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராகவும் முன் ஜாமின் கோரியும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆசிப் அலி சர்தாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய முடியாதவாறு பாதுகாப்பு ஜாமின் வழங்கி நீதிபதி மியான்குல் ஹசன் அவுரங்கசிப் நேற்று உத்தரவிட்டார். #IslamabadHighCourt  #Zardariarrestwarrant #Fakeaccountscase
Tags:    

Similar News