செய்திகள்

பாகிஸ்தான் பிரதமராக, இம்ரான்கான் 14-ந் தேதி பதவியேற்க வாய்ப்பு

Published On 2018-08-04 22:28 GMT   |   Update On 2018-08-04 22:28 GMT
பாகிஸ்தானின் புதிய பிரதமராக, இம்ரான்கான் 14-ந் தேதி பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #ImranKhan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் கடந்த 25-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானின் (வயது 65) பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 116 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்க 137 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்பதால், சிறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை அந்த கட்சி பெற்று உள்ளது.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவர் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) பதவியேற்க விரும்புவதாக கூறியிருந்தார். எனவே அன்று பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.

ஆனால் பாகிஸ்தானின் சுதந்திர தினம் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுவதால், அன்றைய நாளில் புதிய அரசு பதவியேற்க வேண்டும் என பல தரப்பினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் தற்காலிக அரசின் பிரதமர் நசிருல் மல்க் இந்த விருப்பத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து தற்காலிக அரசின் சட்ட மந்திரியான அலி சபர் நேற்று முன்தினம் ‘டான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஆகஸ்டு 14-ந் தேதி பதவியேற்க வேண்டும் என்றே நானும் (அலி சபர்), தற்காலிக அரசின் பிரதமரான ஓய்வுபெற்ற நீதிபதி நசிருல் மல்க்கும் விரும்புகிறோம். அதன்மூலம் தேசிய அளவிலான உற்சாகத்துடன் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்காக நாடாளுமன்ற கூட்டத்தொடரை 11 அல்லது 12-ந் தேதியில் தொடங்கலாம். அப்படி 11-ந் தேதி தொடங்கினால் அன்றே புதிய உறுப்பினர்கள் பதவியேற்க முடியும்.

பின்னர் 13-ந் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலை நடத்தி, 14-ந் தேதி பிரதமர் தேர்வை நடத்தலாம். தொடர்ந்து, அன்றே புதிய பிரதமருக்கு அதிபர் மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியும். அதேநேரம் நாடாளுமன்ற தொடர் 12-ந் தேதி தொடங்கினால், 15-ந் தேதிதான் பிரதமரை தேர்வு செய்ய முடியும்.

ஆனால் பாகிஸ்தானின் புதிய பிரதமர், நாட்டின் சுதந்திர தினமான 14-ந் தேதி பதவியேற்பதையே நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு அலி சபர் கூறினார்.

பாகிஸ்தானின் சுதந்திர தினவிழாவில் புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும் என தற்காலிக அரசு விரும்புவதால், இம்ரான்கானின் பதவியேற்பு விழா 14-ந் தேதிக்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பதவியேற்றபின் தற்காலிக அரசிடம் இருந்து பொறுப்புகளை பெற்றுக்கொள்வார். #ImranKhan
Tags:    

Similar News