செய்திகள்

கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீ- உயிரிழப்பு 60 ஆக உயர்வு

Published On 2018-07-24 04:38 GMT   |   Update On 2018-07-24 10:48 GMT
கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. #GreeceForestFires #Athens #ForestFire
ஏதென்ஸ்:

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகர் அருகில் உள்ள அட்டிகா பிராந்தியத்தில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. கடற்கரையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இரண்டு இடங்களில் பற்றிய தீ, மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள பீச் பகுதியில் உள்ளவர்கள், ரிசார்ட்டுகளில் தங்கியிருந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு தப்பி ஓடினர்.


எனினும் பலர் தீயில் சிக்கிக்கொண்டனர். விபத்து நிகழ்ந்த பகுதியை ஒட்டியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது. வனப்பகுதி வழியாக கார்களில் சென்ற பயணிகளும் தீயில் சிக்கிக்கொண்டர்.

இன்று அதிகாலை நிலவரப்படி 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையான தீக்காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60-ஐ தாண்டியதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில பகுதிகளை நெருங்க முடியாத நிலை இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். #GreeceForestFires #Athens #ForestFire
Tags:    

Similar News