செய்திகள்

துருக்கி அதிபர் தேர்தல் - மீண்டும் அதிபராகிறார் தாயிப் எர்டோகன்

Published On 2018-06-24 20:52 GMT   |   Update On 2018-06-24 20:52 GMT
துருக்கி அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட தாயிப் எர்டோகன் மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றியுள்ளார். #TurkeyElection #Erdogan
அங்காரா:

550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த 1-11-2015 அன்று தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் அடுத்தாண்டு வரை இருக்கும் நிலையில், முன்னதாகவே தேர்தலை நடத்த அதிபர் தாயிப் எர்டோகன் முடிவெடுத்தார்.

அதன்படி, அதிபர் தேர்தலின் போது பாராளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிபர் தேர்தலில் தனக்கு செல்வாக்கு நிலவுவதால், அதன் மூலம் பாராளுமன்றத்திலும் அதிக இடங்களை வெல்லலாம் என்ற கணக்கில் எர்டோகன் இந்த ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இதற்கிடையே, அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. ஏ.கே. கட்சி சார்பில் தாயிப் எர்டோகனும், குடியரசு மக்கள் கட்சி சார்பில் முஹாரம் இன்ஸ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 53 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு மக்கள் கட்சி வேட்பாளர் முஹாரம் இன்ஸ்சுக்கு 31 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

அதிபர் மற்றும் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றி பெற்ற தாயிப் எர்டோகன் மீண்டும் அதிபராகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதும் எர்டோகன் வெற்றி பெற்றதை அறிந்து அவரது கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. #TurkeyElection #Erdogan
Tags:    

Similar News