செய்திகள்
வங்கதேசத்தில் போதை மருந்து தடுப்பு நடவடிக்கை தீவிரம்- 10 நாட்களில் 52 பேர் சுட்டுக்கொலை
வங்கதேசத்தில் போதை மருந்து தடுப்பு நடவடிக்கையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர். #Bangladeshdrugs
டாக்கா:
வங்கதேசத்தில் போதை மருந்து புழக்கம் மற்றும் போதை மாத்திரைகள் கடத்தலைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக யாபா எனப்படும் போதை மாத்திரைகள் வங்கதேசத்திற்குள் கடத்தி வரப்படுவதால் அந்த கும்பலை களையெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்படுகிறது. இதில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பல்களுக்கு இடையிலும் மோதல் உருவாகி உயிரிழப்பு ஏற்படுகிறது.
இன்று மட்டும் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கி சண்டையில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த 10 நாட்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொலைகளை அரசுத் தரப்பு நியாயப்படுத்தி உள்ளது. ஆனால், கொல்லப்பட்டவர்களில் பலர் சட்டத்திற்கு புறம்பான வகையில் தீர்த்து கட்டப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
அண்டை நாடுகளான மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு யாபா என்ற போதை மாத்திரைகள் அதிக அளவில் கடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 40 மில்லியன் மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews #Bangladeshdrugs