செய்திகள்

நிபா வைரஸ்: கேரள நர்சின் 2 குழந்தைகளின் படிப்பு செலவு ஏற்பு: அபுதாபி தொழிலதிபர்கள் அறிவிப்பு

Published On 2018-05-23 21:09 GMT   |   Update On 2018-05-23 21:37 GMT
‘நிபா’ வைரஸ் தாக்கியதில் பலியான கேரள நர்சின் 2 குழந்தைகளின் படிப்பு செலவை அபுதாபியில் வசித்து வரும் தொழிலதிபர்கள் தாங்கள் ஏற்பதாக அறிவித்துள்ளனர். #Lini #Nipahvirus
அபுதாபி:

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெரம்பாவில் வசித்து வந்தவர் லினி (வயது 28). இவருடைய கணவர் சஜீஸ் பக்ரைன் நாட்டில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹிர்துல் (7) மற்றும் சித்தார்த் (2) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். லினி அங்குள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.



இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘நிபா’ வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போது, நர்சு லினிக்கும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் தொற்றியது. பின்னர் அவர் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

‘நிபா’ வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்ததால் தான் இறப்பது உறுதி என்பதை உணர்ந்த லினி, தனது கணவர் சஜீசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதன் பின்னர் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இதற்கிடையே லினி அவருடைய கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் பத்திரிகை மற்றும் நாளிதழ்களில் வெளியானது.

இந்த செய்தியை அறிந்த, அபுதாபியில் வசித்து வரும் சாந்தி பிரமோத் மற்றும் ஜோதி பாலத் ஆகிய 2 தொழிலதிபர்கள் நர்சு லினியின் குழந்தைகளுக்கான படிப்பு செலவுகள் முழுவதையும் தாங்கள் ஏற்பதாக அறிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கேரள மாநிலம் பாலக்காட்டில் அவிட்டிஸ் மருத்துவ அறிவியல் மையத்தின் செயல் இயக்குனர்களாக உள்ளனர்.  #Lini #UAEExpats #Nipahvirus
Tags:    

Similar News