செய்திகள்

தடை நீக்கம் அமலுக்கு வராத நிலையில் கார் ஓட்டியதாக 7 பெண் வக்கீல்கள் சவூதியில் கைது

Published On 2018-05-20 15:26 IST   |   Update On 2018-05-20 15:26:00 IST
சவூதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு தடை விலக்க சட்டம் இன்னும் அமலுக்கு வராத நிலையில், கார் ஓட்டியதாக 7 பெண் வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரியாத்:

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும் என்பது போன்ற பல கட்டுபாடுகள் இருக்கிறது.

சவுதி அரேபிய பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.
இதற்கிடையே சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட இருந்த தடையை நீக்கி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டார்.

பெண்கள் கார் ஓட்ட அனுமதி வருகிற ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், சட்டம் அமலுக்கு வராத நிலையில் கார் ஓட்டியதற்காக மாதர் நல ஆர்வலர்களான 7 பெண் வக்கீல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்து உள்ளது.

கடந்த 15-ந்தேதி முதல் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவர்களில் இமன் அல் நப்ஜன், லுரெயின் அல் ஹத்நுல், அசிசா அல்-யூசப் ஆகியோர் முக்கியமானவர்கள்.

இதில் இமன்-அல்- நப்ஜன், லுரெயின் அல்-ஹத் நுல் ஆகியோர் ஏற்கனவே சவுதி அரேபியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு காரை ஓட்டியதாக கைது செய்யப்பட்டு 75 நாட்கள் சிறையில் இருந்தவர்கள்.

இவர்கள் 7 பேரும் வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் 
விளைவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஒற்றுமையை பிளவுபடுத்த முயற்சி செய்ததாகவும் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

பெண்கள் கார் ஓட்ட தடையை நீக்க கோரி போராடியவர்கள் அந்த தடை நீக்கப்படுவதற்கு முன்பே தேசதுரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் பெண்கள் தங்கள் சொந்த நிறுவனங்களை நடத்த ஆண்களின் அனுமதியை நாட வேண்டிய சட்டத்தையும் பட்டத்து 
இளவரசர் சல்மான் அகற்றினார் என்று குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News