செய்திகள்

வடகொரியாவில் வி.கே சிங் - 20 ஆண்டுகளுக்கு பின் இருதரப்புக்கு இடையே உயர்மட்ட சந்திப்பு

Published On 2018-05-17 09:45 GMT   |   Update On 2018-05-17 09:45 GMT
மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.கே சிங் திடீர் அரசுமுறை பயணமாக வடகொரியா சென்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவிலான சந்திப்பு நடந்துள்ளது. #India #NorthKorea
பியான்ங்யன்ங்:

ஏவுகணை சோதனை, அணு ஆயுத பரிசோதனை ஆகியவற்றை ஓரங்கட்டிவிட்டு மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்த முடிவு செய்துள்ள வடகொரியா, முதற்கட்டமாக தென்கொரியா உடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இதன் பின்னர், அடுத்த மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சிங்கப்பூரில் சந்திக்க உள்ளார். இந்நிலையில், மத்திய வெளியுறவு இணை மந்திரி வி.கே சிங் நேற்று முன் தினம் திடீரென முன்னறிவிப்பு இன்றி வடகொரியா சென்றுள்ளார்.

அந்நாட்டு துணை அதிபர் கிம் யோங் டேய் மற்றும் வெளியுறவு, கலாச்சார துறை மந்திரிகளை வி.கே சிங் சந்தித்துள்ளார். பிராந்திய அரசியல் சூழல், பொருளாதாரம், கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவுக்கு பாகிஸ்தானுடன் உள்ள அணு ஆயுத உறவு குறித்து வி.கே சிங் தனது கவலையை தெரிவித்துள்ளார். கடந்த திங்கள் அன்று வடகொரியாவுக்கான இந்திய தூதராக அதுல் கோட்சர்வ் நியமிக்கப்பட்டார். பதவி்யேற்ற இரண்டு நாட்களில் இந்தியா - வடகொரியா இடையே உயர்மட்ட சந்திப்பை அவர் நடத்த முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

கடைசியாக கடந்த 1998-ம் ஆண்டு இந்தியா - வடகொரியா இடையே உயர்மட்ட சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. #India #NorthKorea
Tags:    

Similar News