செய்திகள்

அமெரிக்க மக்கள் மனதில் ஒபாமாவுக்கு முதலிடம்: கருத்து வாக்கெடுப்பில் தகவல்

Published On 2017-12-29 05:25 GMT   |   Update On 2017-12-29 05:25 GMT
அமெரிக்காவில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முக்கிய பிரமுகர்கள் குறித்து நடத்திய கருத்து வாக்கெடுப்பில் முன்னா அதிபர் பராக் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முக்கிய பிரமுகர்கள் குறித்து சி.என்.என். செய்தி நிறுவனம் டெலிபோன் மூலம் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது.

அவர்களில் முன்னாள் அதிபர் ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு 17 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. அவருக்கு அடுத்தப்படியாக தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்புக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. இவருக்கு ஆதரவாக 14 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

இதன்மூலம் ஒபாமா தொடர்ந்து 10 ஆண்டுகளாக அமெரிக்கர்களின் மனதில் முதல் இடம் பிடித்துள்ளார். இதுவரை நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்புகளில் அமெரிக்க மக்கள் மனதில் பதவியில் இருக்கும் அதிபரே முதலிடம் பிடித்து வந்தார்.

டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்டது. இருந்தும் அவரால் மக்கள் மனதில் முதலிடம் பிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் 3-வது இடம் பிடித்துள்ளார்.


அமெரிக்கர்கள் மனதில் இடம் பிடித்துள்ள பெண் பிரமுகர்களின் பட்டியலில் ஹிலாரி கிளிண்டன் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு 9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. மிச்செல் ஒபாமா 2-வது இடம் பிடித்துள்ளார். அவருக்கு 7 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 16 ஆண்டுகளாக ஹிலாரி கிளிண்டன் முதலிடம் பெற்றுள்ளார்.

அதே நேரத்தில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா டிரம்புக்கு 1 சதவீதம் வாக்குகளே கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அதாவது கடந்த 1946-ம் ஆண்டில் இருந்து இதுவரை 71 தடவை இத்தகைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் இதுவரை பதவியில் இருந்த 58 அதிபர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
Tags:    

Similar News